background img

புதிய வரவு

கார்த்திகை விரதம்

முருகனுக்கு திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளிக்கிழமையும், நக்ஷத்திரங்களில் கிருத்திகையும் கிருத்திகை விரதம் சிறப்பு. முருகன் பிறந்தது விசாக நக்ஷத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலூட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை.

கங்கையாகிய ஆறு தாங்கிய ஆறு அக்னிப் பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறு பெண்களால் வளர்க்கப்பட்டான். அவன் குழந்தையாய் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் ஆறு நாட்களே என்று சொல்லப்படுகிறது.

இப்படிச் சகலத்திலும் ஆறு என்னும் எண் முக்கியமாய் அமையப் பெற்ற முருகளுக்கான நாமம் `சரவணபவ' என்னும் ஆறெழுத்தே ஆகும். நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது இந்த முருகனே என்பதே அருணாகிரியார் கூற்று.

கார்த்திகை விரதமே கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று எனக்கூறுவார்கள். சூரனை வதைக்க வேண்டி ஆறுமுகன் தோன்றியதும், அவனைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிப் போற்றி வளர்த்தும், குமரன் வளர்ந்ததும், அவனை அணைத்து ஒன்று சேர்க்க உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தியதோடு இனி கந்தன் இந்த பெண்களின் பெயரால் `கார்த்திகேயன்' எனவும் அழைக்கப்படுவான் என்று சொன்னார். இதைக் கந்தபுராணம்.

"கந்தன் தனை நீர் போற்றிய கடனால்
இவன் உங்கள் மைந்தன் என்னும் பெயராகுக''

என்றும் அருளியதோடு மேலும் அவர்களுக்கு நக்ஷத்திரப் பதவியும் அளித்து, இந்த கார்த்திகைப் பெண்களின் நக்ஷத்திரம் வரும் சமயம் விரதம் இருப்பவர்களுக்கு குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்று அருளிச் செய்தார்.

கார்த்திகை விரதம் இருப்பது பற்றிக் கந்தபுராணத்தில்,

"நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்
தந்தம் குறை முடித்துப் பரந்தனை நல்குலம் என்றான்''

எனவும் சொல்லுகின்றது.

விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விரத முறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக்கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.

ஆடி மாதக் கார்த்திகை ஏன் விசேஷம் என்றால் மழைக்காலத் தொடக்கமான தக்ஷிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயணம் திருமணம், உபநயணம், கிரஹப்பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப்படுகிறது.

ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்து கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.

தை மாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts