background img

புதிய வரவு

தி.மு.க.,வினர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெ.,

சென்னை : "அ.தி.மு.க.,வினர் மீது நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு காரணமான அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட தி.மு.க.,வினரை கைது செய்ய, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:தேர்தலில் தோல்வி உறுதி என்பதை அறிந்த கருணாநிதி பணம், படை, அதிகார பலம் ஆகியவற்றின் மூலம், ஜனநாயகத்தை சீர்குலைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கோவை மாவட்டம், மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட உடுக்கம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, அமைச்சர் சாமிநாதன் ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் கிடைத்து, அ.தி.மு.க.,வினர் அந்த வீட்டை முற்றுகையிட்டதுடன், தேர்தல் அதிகாரிக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகவேலு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். இந்த தருணத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வீட்டிலிருந்து தி.மு.க.,வினர் கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் சண்முகவேலு மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற தொண்டர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்த பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.சண்முகவேலு மற்றும் அ.தி.மு.க.,வினர் மீது தி.மு.க.,வினர் நடத்தியுள்ள கொலைவெறி தாக்குதலுக்கு என் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலுக்கு காரணமான அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட தி.மு.க.,வினரை கைது செய்ய, தேர்தல் கமிஷன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பென்னாகரம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக தி.மு.க.,வினர் ஈடுபட்டதை சுட்டிக்காட்டிய தே.மு.தி.க., செயலர் அசோகனை, தி.மு.க.,வினர் உருட்டுக் கட்டையால் அடித்து கொலையே செய்துள்ளனர். தி.மு.க.,வினரின் இந்த கொலை வெறியாட்டத்திற்கும் என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் சம்பந்தப்பட்ட தி.மு.க.,வினரை உடனடியாக கைது செய்ய, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வன்முறை வெறியாட்டத்தில் மரணமடைந்த அசோகன் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது, தி.மு.க.,வினரால் நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைகளை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் போதுமான மத்திய ரிசர்வ் படைகளை அனுப்பி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி, சுதந்திரமாக ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய தேர்தல் கமிஷனையும், தமிழக தேர்தல் அதிகாரியையும், போலீசாரையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts